தாம்பரம் ரவுடியை கொல்ல முயன்ற 7 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண்

திண்டிவனம், ஜூலை 8: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த தாம்பரம் ரவுடியை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக 7 பேர் கும்பல் நேற்று திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் மீது தாம்பரம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் ஒரு வழக்கு விசாரணைக்காக நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக அவர் வந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே லோகேஷை, ஒரு கும்பல் சுற்றி வளைத்து வெட்ட முயன்றது.

இதனால் அச்சமடைந்த லோகேஷ், அங்கிருந்து தப்பியோடினார். இருப்பினும் அவரை விடாமல் விரட்டி சென்ற கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை அவர் மீது வீசியது. இதில் கீழே விழுந்த லோகேஷை அக்கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோர்ட்டில் தாம்பரத்தை சேர்ந்த ராகுல் (27), தனசேகரன் (25), பிரவீன்குமார் (23), லோகேஷ் (27), அரவிந்த்குமார் (25), ரூபேஷ் (22), சாம்சன் மோசஸ் (26) ஆகிய 7 பேர் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கு தொடர்பாக 7 பேர் கும்பல் சரணடைய வந்ததால் திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை