தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் விவேக்ராஜ்(28). இவர் மீது தாம்பரம், சிட்லப்பாக்கம், சேலையூர், பீர்க்கன்கரணை, ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை பிடிப்பது போலீசருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. போலீசருக்கு தண்ணி காட்டி தொடர்ந்து அவரது கூட்டாளிகள் மூலம் பல்வேறு குற்ற செயல்களில் இவர் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மற்றும் தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் ஆகியோரின் ஆலோசனைப்படி தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், விவேக்ராஜ், அவரது நண்பர் விஷால் (28) ஆகியோர் மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் மாந்தோப்பு பகுதியில் உள்ள சாலையோர தள்ளுவண்டி கடையில் நேற்று காலை உணவு அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்போது கடைக்காரர் சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்க சொல்லி கேட்டபோது தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடைக்காரரின் கழுத்தில் வைத்து, `நான் தாம்பரத்தில் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா. என் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அந்த வழக்குகள் வரிசையில் உன்னை கொலை செய்து அந்த வழக்கையும் அதில் சேர்த்துவிட செய்யாதே’ என மிரட்டியதோடு கடைக்காரரின் சட்டை பையில் இருந்து ரூ.500யை எடுத்துக்கொண்டு தப்பினர். இந்நிலையில், லட்சுமிபுரம் டாஸ்மாக் பார் அருகே விவேக்ராஜ், விஷால் ஆகியோர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் போலீசாரை வெட்ட வந்தனர். போலீசார் துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….