Friday, September 20, 2024
Home » தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெருக்கடி; மாநகரின் முதல் மேயருக்கு காத்திருக்கும் சவால்கள்: நிதி சுமையை சமாளிக்க என்ன செய்ய போகிறார்?

தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெருக்கடி; மாநகரின் முதல் மேயருக்கு காத்திருக்கும் சவால்கள்: நிதி சுமையை சமாளிக்க என்ன செய்ய போகிறார்?

by kannappan

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரின் முதல் மேயராக பொறுப்பேற்று இருக்கும் மகேஷ், மாநகர மக்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நகர மக்களிடம் ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டு பெருமை வாய்ந்த நாகர்கோவில் நகராட்சி, கடந்த 2019ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகளை இணைத்து, சிறிய அளவில் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 52 வார்டுகளாக வரையறுக்கப்பட்டது. இந்த மாநகராட்சியில் மொத்த மக்கள் தொகை சுமார் மூன்றரை லட்சம் ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற பல்வேறு வழிபாட்டு தலங்கள் நிறைந்த நகராக நாகர்கோவில் விளங்குகிறது. மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 531 பேர். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், முதல் முறையாக தேர்தலை சந்தித்தது. கவுன்சிலர்கள் தேர்தல், மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில், 24 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் விளங்குகிறது. இந்த கட்சியின் சார்பில் மேயருக்கு போட்டியிட்ட மகேஷ், துணை மேயர் பதவிக்கு போட்டியிட்ட மேரி பிரின்சி லதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். முதல் மேயர், துணை மேயர் அந்தஸ்தை திமுக கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. மாநகரின் மேயர் என்பது மிகவும் முக்கியமான பொறுப்பாகும். மாநகர மக்களின் தந்தையாக மேயர் பார்க்கப்படுகிறார்.  வளர்ச்சி பாதையை நோக்கி மாநகராட்சி செல்லும் என்று தனது முதல் பேட்டியிலேயே முத்திரை பதிப்பது போன்ற உற்சாகமான வார்த்தைகளை மகேஷ் வெளிப்படுத்தி உள்ளார். மாநகரின் முதல் மேயர் என்பதுடன், குறுகிய நகரம், அதிக மக்கள் தொகை கொண்ட இந்த மாநகரை, மேயர் என்ற பொறுப்பில் அமர்ந்துள்ள மகேஷ் எப்படி வழி நடத்த போகிறார். மாநகரில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு எந்த மாதிரியான தீர்வுகளை  காண போகிறார்? என்பதும் பலத்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கி உள்ளது. தற்போது மாநகரில் உள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் முதன்மையான குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெருக்கடி, இழுபறியான பாதாள சாக்கடை பிரச்சினை போன்றவை ஆகும். குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை வறண்டால், மாநகரில் குடிநீர் பிரச்சினைக்காக மக்கள் அல்லோலப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு மாற்று திட்டமாக ெகாண்டு வரப்பட்ட, புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிகளும் தற்போது இழுபறியான நிலையில் உள்ளது. இதே போல் சுமார் 8 ஆண்டுகளை கடந்தும் நிறைவேறாமல் அரைகுறையில் பாதாள சாக்கடை பணிகள் உள்ளன. இந்த இரு பணிகளும் தற்போது மாநகர மக்களை நரக வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெருக்கடி ஆகும். ஆண்டுக்கு, ஆண்டு அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப சாலை வசதி இங்கு இல்லை. பல்வேறு சாலைகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. பார்க்கிங் வசதி இல்லாத வர்த்தக நிறுவனங்கள் அதிகம் ஆகும். சாலைகள் வாகன நிறுத்தங்களாக மாறி உள்ளதால், மக்கள் நடமாட வசதி இல்லை. நகரின் மைய பகுதியில் பாலங்கள் உருவாக்கப்படும். புறநகர் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றெல்லாம் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்றி சென்றனர். மாநகராட்சியின் வருமானத்தை பெருக்க வேண்டிய நிலையும் மேயர் மகேசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது. சாமான்ய மக்களின் வரிகளை உயர்த்தாமல், மாநகராட்சியின் வருமானத்தை பெருக்க அவர் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறார்? என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. காண்ட்ராக்டர்களுக்கு பணம் பாக்கி, மாநகராட்சி செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி, மாநகராட்சி ஊழியர்களின் சம்பளம், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சிகளில் மேம்பாட்டு பணிகள், சாலை வசதிகள், நகர்ப்புற சுகாதார நிலையங்களின் மேம்பாடு, காய்கறி, மீன் சந்தைகளின் மேம்பாட்டு வசதிகள் என பல்வேறு பணிகளை குறைந்த நிதியை கொண்டு கையாள வேண்டியதிருக்கிறது. இவற்றின் எந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, மேயர் மகேஷ் நிறைவேற்ற போகிறார். ஒன்றிய, மாநில அரசுகளின் நிதிகளை அதிகளவில் பெற நடவடிக்கைகள் என்ன? என்பதெல்லாம் இனி வரும் நாட்களில் மேயர் மகேஷ், மேற்கொள்ள போகும் நடவடிக்கைகளை பொறுத்து அமையும். முதல் மேயர் என்ற அந்தஸ்துடன், இந்த மாநகரை தரம் உயர்த்த மாநகரின் தந்தை என்ற வகையில், மகேஷ் நடவடிக்கைகள் மேற்கொள்வார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

four + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi