Sunday, September 29, 2024
Home » தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் மூளை சாவு

தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் மூளை சாவு

by Neethimaan

வடலூர், ஜூலை 30: வடலூரில் விளையாட்டு பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் மூளை சாவு அடைந்தான். இதனால் மனமுடைந்த அவர் தாயார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூர் தர்மச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (35). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மகன் கிஷோர் (15), மகள் பரணிக்கா (10) உள்ளனர். இவர்கள் வடலூர் சந்தைத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முறையே 10, 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட கிஷோர் சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளான். இந்நிலையில் கடந்த 24ம் தேதி மாலை மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்து வந்தது.

அப்போது ஈட்டி எறிதல் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்து படுகாயம் அடைந்தான். உடனே அருகில் இருந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்தான். இதனால் மனமுடைந்த அவரது தாயார் சிவகாமி நேற்று ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நெய்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் மாணவன் கிஷோரின் உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். பள்ளி மாணவன் விளையாட்டு பயிற்சியின்போது மூளை சாவு அடைந்த சம்பவம் வடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi