தற்கொலை செய்த தொழிலாளி உடலை எடுக்க விடாமல் பாசப்போராட்டம் நடத்திய நாய்

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய் மொழி அருகே தற்கொலை செய்த தொழிலாளி உடலை எடுக்க விடாமல் வளர்த்த நாய் பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்ற முத்து (66). சமையல் வேலைக்கு சென்று வந்தார். வேலை இல்லாத நேரங்களில்  கூலி வேலைகளுக்கும் செல்வது வழக்கம். இவரது மனைவி பாஞ்சம். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணனின் மனைவிக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகி விட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனால் ராமகிருஷ்ணன் கடும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமகிருஷ்ணன் வெளியே சென்று உள்ளார். அப்போது வீட்டில் வளர்க்கும் நாயும் உடன் சென்று உள்ளது. ராமகிருஷ்ணன் எப்போது ெவளியே சென்றாலும் வளர்ப்பு நாயும் உடன் சென்றுவிடும். இந்த நிலையில் வெளியே சென்ற ராமகிருஷ்ணன் மற்றும் நாய் வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அக்கம் பக்கத்திலும், உடன் வேலை செய்பவர்களிடமும் விசாரித்தனர். இருப்பினும் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் அவர்களின் வளர்ப்பு நாய் திடீரென வீட்டை நோக்கி ஓடி வந்தது. பின்னர் வீட்டை சுற்றிச்சுற்றி வந்து குரைத்து கொண்டே இருந்தது. யாராவது வெளியே வந்து பார்த்தால் உடனே நாய் திரும்பி ஓடியது. அவர்கள் வீட்டுக்குள் சென்று விட்டால் மீண்டும் வந்து குரைத்தவாறு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராமகிருஷ்ணனின் மகன் சொர்ணம் நாயை பின்தொடர்ந்து சென்றார். நாயும் நிற்காமல் ஓடியது. அது பொய்கை அணை அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்துக்குள் புகுந்து ஒரு மரத்தின் அடியில் நின்று குரைத்தது. அங்கு பார்த்தபோது ராமகிருஷ்ணன் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகன் சொர்ணம், உடனே ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், கவுன்சிலர் மாதவன் பிள்ளைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மற்றும் ஊர் மக்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்த்தனர். மேலும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்க முயன்றனர்.ஆனால் ராமகிருஷ்ணனின் உடலை அங்கிருந்து எடுக்க விடாமல் நாய் குரைத்தவாறே தடுத்து வந்தது. மேலும் உடல் அருகே படுத்து கொண்டது. அதை துரத்த முயன்றும் அசையவில்லை. நீண்டநேரத்துக்கு பின்னர் ஒருவழியாக அதனை அங்கிருந்து அகற்றி, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஜமானர் உடனான வளர்ப்பு நாயின் இந்த பாச போராட்டம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ேபாலீசாரை மெய்சிலிர்க்க வைத்ததோடு, கண்களில் கண்ணீரையும் வரவழைத்தது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்