Monday, September 23, 2024
Home » தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு விண்ணப்பித்தது 1.5 லட்சம் பேர் தேர்வானது 29,984 பேர் மட்டுமே: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு விண்ணப்பித்தது 1.5 லட்சம் பேர் தேர்வானது 29,984 பேர் மட்டுமே: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

by kannappan

சென்னை: தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் 28984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளி கல்வி துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படவில்லை என கூறி  ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி உள்ளிட்ட தகுதியுடன் வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கும் பணியை நடத்தலாம். பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக்கூடாது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும். வழக்கு தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் நீதிமன்ற உத்தரவுப்படி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக ஜூலை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை  ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேரில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்வு நடைமுறைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்று வழக்கின் விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும் என்று மீண்டும் தெளிவுபடுத்தினார்….

You may also like

Leave a Comment

15 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi