Saturday, October 5, 2024
Home » தர்மபுரியில் 3 மணிநேரம் பரபரப்பு செல்போன் டவரில் தூக்கு கயிறுடன் மிரட்டல் விடுத்த கட்டிட மேஸ்திரி

தர்மபுரியில் 3 மணிநேரம் பரபரப்பு செல்போன் டவரில் தூக்கு கயிறுடன் மிரட்டல் விடுத்த கட்டிட மேஸ்திரி

by kannappan

* பட்டா தர அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டுதர்மபுரி: தர்மபுரி அதியமான்கோட்டையில் தனிப்பட்டா மாற்றித் தரக்கோரி 100 அடி உயர செல்போன் டவரில் ஏறி கட்டிட மேஸ்திரி தூக்குக்கயிறுடன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் 3 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஏலகிரியான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (60). விவசாயி. இவருக்கு சின்னம்மாள், எல்லம்மாள் என 2 மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன், 2வது மனைவிக்கு 5 மகன், ஒரு மகள் உள்ளனர். 7 பேருக்கும் திருமணமானதையடுத்து அனைவருக்கும் சொத்தை பிரித்து கொடுத்துள்ளார். 2வது மனைவியின் 3வது மகன் விஸ்வநாதன் (35). விவசாயி மற்றும் கட்டிடமேஸ்திரி. இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், 11, 9 வயதுகளில் குழந்தைகள் உள்ளனர். விவசாயியான இவருக்கு 70 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலம் கூட்டுப்பட்டாவில் இருப்பதால், தனிப்பட்டாவாக மாற்ற கடந்த 2 வருடமாக அலைந்து வந்தார். இதற்காக ₹1 லட்சம் செலவு செய்தும் தனிப்பட்டா வாங்க முடியவில்லை. இதனால், மனவேதனையடைந்த விஸ்வநாதன் நேற்று காலை 8 மணிக்கு அதியமான்கோட்டை காவல்நிலையத்திற்கும், காலபைரவர் கோயிலுக்கும் இடையே உள்ள 100 அடி உயரமுள்ள தனியார் செல்போன் டவர் மீது ஏறி உச்சிக்கு சென்றார். அங்குள்ள ஒரு கம்பியில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு, தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, தீயணைப்பு துறையினர், போலீசார், வருவாய் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தர்மபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் சம்பவயிடம் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்பதற்காக செல்போன் டவரில் ஏறினர். ஆனால், விஸ்வநாதன் என்னை காப்பாற்ற யாரும் மேலே வரக்கூடாது எனக்கூறி, டவரில் உள்ள ஒரு பகுதியில் கட்டியிருந்த கயிற்றில் தலையை உள்ளே விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனையடுத்து, அதியமான்கோட்டை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விஸ்வநாதன், கடந்த 2 வருடமாக பட்டா கேட்டு வந்தேன். எனக்கு பட்டா வழங்கவில்லை. எனவே, எனது மனைவி பெயரில் பட்டாவை மாற்றி இன்றே வழங்க வேண்டும். அதை காண்பித்த பிறகே மேலே இருந்து கீழே இறங்குவேன் என கூறினார். விஸ்வநாதனின் மனைவி, குழந்தைகள், தாயார் நேரில் வரவழைக்கப்பட்டு, டிஎஸ்பி அண்ணாதுரை, தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் விஸ்வநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, காலை 11 மணி அளவில் டவரில் இருந்து கீழே இறங்கினார். உரிய ஆவணங்கள் இருந்தால், அரசின் விதிமுறைக்குட்பட்டு உடனே பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். அதன்பின் இறங்கி வந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணிநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விஸ்வநாதன் கூறுகையில், எனக்கு ஒதுக்கப்பட்ட குடும்ப சொத்துக்கு தனிப்பட்டா கேட்டு, கடந்த 2 வருடமாக அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன். இதற்காக என் உழைப்பு, பணம் செலவு செய்துவிட்டேன். என்னிடம் இப்போது ஒன்றும் இல்லை. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்துவிட்டதால், இந்த முடிவுக்கு வந்தேன் என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதுபோன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து 3பேர்……தர்மபுரி அதியமான்கோட்டை காவல் நிலையம்-  காலபைரவர் கோயில் அருகே உள்ள செல்போன் டவரில் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பும் ஏலகிரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இதுபோல் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்த டவரில் இதுவரை 3 பேர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்….

You may also like

Leave a Comment

9 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi