குளித்தலை, செப்.15: தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் கரூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராம்ராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டம் குளித்தலையில் உழவர் சந்தை பகுதியில் கடந்த 9ம் தேதி முதல் மின்னணு தராசு, மேடை தராசு, மேஜை தராசு, விட்டதராசு, ஊற்றல் அளவை, இரும்பு மற்றும் பித்தளை எடை கற்கள் பரிசோதனை செய்யப்பட்டு மறுபரிசீலனை சான்று வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் கலந்து கொண்டவர்கள் அதற்கான மறுபரிசீலினை சான்றுகளை பெற்று சென்றுள்ளனர்.
மேலும், இதுவரை முகாமில் கலந்து கொண்டு முத்திரை பரிசோதனைக்கு வராத கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் தங்களது முத்திரை புதுப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள் ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க படும் என கரூர் மாவட்ட முத்திரை ஆய்வாளர் சரவணன் கூறியுள்ளார். மேலும் செப்டம்பர் 14 முதல் 30ம் தேதி வரை (சி) காலாண்டுக்கான முத்திரை முகாம் மணப்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றும் இணை ஆணையர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.