சத்தியமங்கலம், ஜூன் 8: தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு குறுகிய மற்றும் மத்திய கால நெல் ரகங்களில் ஆதார, சான்று மற்றும் உண்மை நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கரீப் பருவத்தில் பயிரிடுவதற்கேற்ற நெல் ரகங்களான கோ 51, கோ 54, ஏ.டீ.டி (ஆர்) 45 ஆகிய ரகங்களில் ஆதார விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது.
இவற்றுள் கோ 51 ரகமானது, அதிக மகசூல் திறன் கொண்டது. அதாவது ஒரு ஹெக்டேருக்கு 6500 கிலோ மகசூல் பெறலாம். இந்த ரகமானது 110 நாட்கள் வயதுடைய நடுத்தர சன்ன ரகத்தைச் சேர்ந்த குறுகிய கால ரகமாகும். இந்த ரகமானது இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குலை நோய் போன்றவற்றை தாங்கும் திறனுடையது. எனவே, ஈரோடு மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இந்த ரகங்களை உற்பத்தி செய்து பயனடையுமாறு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.