Sunday, October 6, 2024
Home » தரமற்ற பொருட்களை தடை செய்ய கோரிக்கை பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப விளையாட்டு உபகரணங்கள்-உடற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தரமற்ற பொருட்களை தடை செய்ய கோரிக்கை பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப விளையாட்டு உபகரணங்கள்-உடற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

by kannappan

சேலம் : தமிழகத்தில் பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப விளையாட்டு உபகரணங்களை விநியோகம் செய்ய வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகத்தில் தொடக்க மற்றும் பள்ளிக்கல்வி இயக்குரகத்தின் கீழ் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக, ஆண்டுதோறும் மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனிடையே ஒரே மாதிரியான உபகரணங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் உபயோகமாக இருக்காது என கருத்து எழுந்துள்ளது. இதனால், பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ கூறியதாவது:தமிழகத்தின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், பதவியேற்றவுடன் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ₹6,000 ஆக உயர்த்தி வழங்கியதற்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கிரிக்கெட், பேட்மிட்டன், டென்னீஸ், வாலிபால், கால்பந்து, தடகளம் ஆகியவற்றுக்கான விளையாட்டு உபகரணங்களும், முதலுதவி மருத்துவ உபகரணங்களும் வழங்கப்படுகிறது. இதில், ஒரே மாதிரியான விளையாட்டு பொருட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும், அந்தந்த வட்டாரத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாட்டுகளை மாணவர்கள் விளையாடுவார்கள். மேலும், பல பள்ளிகளில் அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்க மைதானமே இருக்காது. உதாரணமாக, கிராமப்புறங்களில் உள்ள 90 சதவீத பள்ளிகளில் கூடைப்பந்து மற்றும் ஹேன்ட் பால் மைதானமே இருக்காது. ஆனால், அந்த பள்ளிகளுக்கு கூடைப்பந்து, ஹேன்ட் பாலுக்கான உபகரணங்கள் வழங்கும்போது அவை பயனற்று வீணாகி விடும். இதேபோல், பல பள்ளிகளில் ஒருசில விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் பயன்படுத்தப்படாமலேயே வீணாகும். எனவே அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான உபகரணங்களை வழங்குவதற்கு பதிலாக, அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டுகளுக்கு ஏற்ப உபகரணங்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். அதேசமயம், தற்போது வழங்கப்பட்டு வரும் கால்பந்து கோல் போஸ்ட், ஹர்டில்ஸ் போன்றவை பிளாஸ்டிகால் ஆனதாகவும், குண்டு எறிதல், வட்டு எறிதலுக்கு வழங்கப்படுபவை கார்பன் கலந்த ரப்பர் பொருட்களால் ஆனதாகவும் உள்ளது. இதேபோல், பந்துகள் பெரும்பாலும் தரமற்றதாகவும் உள்ளது. இதுபோன்ற தரமற்ற உபகரணங்களை தடை செய்வதுடன், கடந்த முறை வழங்கப்பட்டதை போல் அந்தந்த பள்ளி மேலாண்மை குழு வாயிலாக உபகரணங்களை வழங்கினால் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறுவார்கள். எனவே இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு இளங்கோ தெரிவித்தார்….

You may also like

Leave a Comment

seventeen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi