தரங்கம்பாடி, மே 10: மயிலாடுதுறை மாவட்டம்; தரங்கம்பாடி பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அமுதவல்லி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தனர். திருக்கடையூர், சந்திரபாடி, பொறையார் ஆகிய பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளை சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அமுதவல்லி, மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார;வையிட்டு ஆய்வு செய்தனர். திருக்கடையூர் ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டியினை சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு தினசரி வழங்கப்படும் குடிநீர் விநியோக அளவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சந்திரபாடி ஊராட்சியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பார்வையிட்டு குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் பகுதியில் இயங்கும் தரைமட்ட நீர்தேக்க தொட்டியினை பார்வையிட்டு, முறையாக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் பீர் ஆலம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், துணை இயக்குனர்(சுகாதாரத்துறை) பிரபு அஜித்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.