சென்னை: தமிழ் இயக்கம் சார்பில் மறைமலையடிகளாரின் 147வது பிறந்தநாள் விழா விஐடி வேந்தரும், தமிழியக்க நிறுவனருமான கோ.விசுவநாதன் தலைமையில் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடந்தது. விழாவில் அவர் பேசியதாவது, `1916ம் ஆண்டு மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார். 2018ம் ஆண்டு தமிழியக்கம் தொடங்கப்பட்டு தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொண்டாற்றி வருகிறது. தமிழ் மொழி இருக்கும் வரை மறைமலையடிகளாரை யாரும் மறக்கமுடியாது நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 1856ம் ஆண்டு கால்டுவெல் வெளியிட்ட புத்தகத்தில் தமிழ் மொழி மட்டும்தான் பிற மொழி துணை இல்லாமல் எழுதவும், பேசவும் முடியும் என குறிப்பிட்டார்’ என்றார். முன்னதாக கவிஞர் முத்துலிங்கம் மறைமலையடிகளாரின்உருவ படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் இயக்கத்தின் சார்பில் கவிஞர் வரலட்சுமி அனைவரையும் வரவேற்றார். சங்கர் நீதி மாணிக்கம் நன்றி கூறினார். கக்கன் பேத்தியும், காவல்துறை இணை இயக்குனருமான ராஜேஸ்வரி, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, விஜிபி குழுமத்தின் இயக்குனர் வி.ஜி.சந்தோசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்….