தஞ்சாவூர், அக்.4: மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு இந்தியாவில் சாதனையாக இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் மகப்பேறு விகிதம் 55 ஆக கட்டுக்குள் இருந்தது. கடந்த ஓராண்டில் 55 ல் இருந்து 44 ஆக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 9% இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்பது மகத்தான சாதனை இந்திய அளவில். மகப்பேறு இறப்பு விகிதம் இல்லாத மாவட்டமாக விருதுநகர் உள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் முன்னேறி வருகிறது. ஒரே ஊசியை பயன்படுத்திய பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது அனைவருக்குமான படமாக அமையும்.
தமிழகத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் தான் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கிடங்கு உள்ளது. 6 மாவட்டங்களில் இல்லாமல் இருந்தது. ₹30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கும் மருத்துவ கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவ கிடங்குகளிலும் அடிப்படை தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதை நுாறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு மூலம் 545 விருதுகளை நமது சுகாதாரத்துறை பெற்றுள்ளது. சுகாதார ஆய்வாளர் 1,066 பேர், கிராம சுகாதார செவிலியர்கள் 2,253 பேர் மற்றும் டாக்டர்கள் 2,550 பேருக்கான பணி நியமனம் தொடர்பான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சுகாதார ஆய்வாளர் பணிகள் தொடர்பாக 38 வழக்குகள் உள்ளது. கிராம சுகாதார செவிலியர்கள் பணிகள் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்குகள் போடும் நபர்கள் அரசிடம் வருங்கள் பேசி தீர்வு காண்போம். 2,286 ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி – நாய் கடி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் பாம்பு கடி – நாய் கடி பாதிப்பு உள்ளவர்கள் 100% பாதுகாப்பாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.