ஈரோடு, செப்.13: தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். ஈரோடு வட்ட தலைவர் கண்ணன், மாநிலச் செயலாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகத்திலும் கிராம உதவியாளர்களை இரவு காவல் பணி, அலுவலக பணி, ரெக்கார்ட் ரூம் பணி உள்ளிட்ட பணிகளுக்கு கிராம உதவியார்களை கட்டாயமாக பயன்படுத்துகிறார்கள்.
பணிக்கு வராத கிராம உதவியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்படுகிறது. இது, கிராம உதவியாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு, கொடுமுடி வட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.