சென்னை: தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமை செயலகத்தில் நேற்று 8 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு நடந்தது. அதன்படி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜி.அசோக், மோகன்ராஜ், எஸ்.சாந்தி, பி.குமார், ஜ.ராணி, கே.இந்துமதி, ஆர்.ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு தொழிலாளர் பணிக்கான ஆணைகளையும், ஆர்.ராஜாஜெயசீலன் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆர்.பிருந்தா தேவி உடனிருந்தார். பணி நியமன ஆணை பெற்ற தொழிலாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளருக்கு பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஓர் ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ஒன்றுக்கு தொழிலாளர்களுக்கு ரூ.5,500, இளநிலை உதவியாளருக்கு ரூ.7,600 தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும். ஓராண்டு பயிற்சிக்கு பின்னர் தகுதிகான் பருவம் நிர்ணயிக்கப்பட்டு காலமுறை ஊதியம் (ஊதிய விகிதப்படி) வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. …