சென்னை: தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்ட பணிகள் ரூ.920.56 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார். சென்னை தலைமை செயலக வனத்துறை கூட்டரங்கில் நேற்று, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் வனத்துறை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, வனப்பாதுகாவலர் சையது முஜமில் அப்பாஸ், தலைமை மற்றும் கூடுதல் வனப்பாதுகாவலர்கள் கலந்து கொண்டு வனத்துறை பணிகள் குறித்து தெரிவித்தார்கள். இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்திற்கு ரூ.920.56 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதற்காக ஜப்பான் நிதியுதவி பெறப்படவுள்ளது. வளம் குன்றிய வனப்பகுதிகளை மீட்டெடுக்கும் திட்டத்திற்கும் நபார்டு ரூ.281.14 கோடி வழங்க உள்ளது. இந்த திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கதிட்டமிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஈடுசெய் காடு வளர்ப்பு நிதியின் மூலம் ரூ.38.82 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வனத்துறை வனப்பாதுகாப்பு நவீனப்படுத்துதல் பணிகளுக்கு ரூ.45 கோடி நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைத்திட பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வனப்பாதுகாப்பு பணியாளர்களின் வசதிக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் 250 மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்கி வழங்கப்படவுள்ளன. பசுமைத் தமிழகம் இயக்கம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் நடப்பாண்டு 2 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவு செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு, 7 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.வனப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 1161 சீருடை வனப்பணியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளனர். 100 கிராமங்களில் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்பிற்கு மோப்ப நாய் பிரிவு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது….