Friday, July 5, 2024
Home » தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் இறையாண்மை தொடர்புடையது என்பதால் ஜனாதிபதியின் ஒப்புதலை கோருகிறோம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ேபச்சு

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் இறையாண்மை தொடர்புடையது என்பதால் ஜனாதிபதியின் ஒப்புதலை கோருகிறோம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ேபச்சு

by kannappan

சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும் என்பதில் நாம் அனைவருமே ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 7.7.2006 அன்று ஒரு கமிட்டி அமைத்தோம். 13.11.2006 அன்று அறிக்கை பெற்றோம். 6.12.2006 அன்று சட்டமன்றத்தில் அதற்கான சட்டமுன்வடிவை நிறைவேற்றினோம். அந்த சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, 3.3.2007 அன்று குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். அதாவது 86 நாட்களில் ஆளுநரும், குடியரசு தலைவருமே ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இப்படி குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கும் முன்பு, ஒன்றிய அரசில் உள்ள மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் இருக்கும் உயர் கல்வி துறை 15.2.2007 அன்று தமிழ்நாட்டின் சட்டத்தை ஏற்கலாம் என்று ஒப்புதல் வழங்கியது. அந்த ஒப்புதலில் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான கருத்துகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.எனவே, நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசமைப்பு சட்டப்படி செல்லத்தக்கது. நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவது உயர் கல்வியின் தரத்தை குறைக்காது. பிளஸ்-2 தேர்வுகள் மிகவும் நேர்மையானவை, வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு மாநிலமும் வெளிப்படையான மற்றும் நேர்மையான மாணவர் சேர்க்கை நடைமுறையை வகுத்துக் கொள்ள ஆட்சேபனை இல்லை. இதை கூறியது தமிழ்நாடு அரசு அல்ல, ஒன்றிய அரசின் உயர்கல்வி துறை. அது மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு துறைக்கும் போனது.இந்த துறையின்கீழ்தான் இப்போது சொல்லப்படுகின்ற நீட் தேர்வு வருகிறது. அந்த ஒன்றிய மக்கள் நல்வாழ்வு துறை, நுழைவுத்தேர்வினை ஒழிக்கும் அன்றைய தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தது. ஒன்றிய அரசின் உயர்கல்வி துறை, மக்கள் நல்வாழ்வு துறை, சட்டத்துறை அனைத்தும் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த பிறகுதான் குடியரசு தலைவர் 2006ம் ஆண்டு நுழைவுத்தேர்வை ஒழிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அந்த சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றம் போனார்கள். சென்னை உயர் நீதிமன்றம் ‘சட்டம் செல்லும்’ என்று தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘தமிழ்நாடு அரசின் நுழைவுத்தேர்வு ஒழிப்பு சட்டம் ஒரு சமூக நலன் சார்ந்த சட்டம், சமூகநீதியை அடைய இது தேவை’ என்று சொல்லி இருக்கிறது. அப்படிப்பட்ட பிரத்யேகமான நிலை, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கையில் தமிழ்நாட்டில் சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது. அதாவது, பிளஸ்-2 மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவ கல்வியிலும், பொறியியல் கல்வியிலும் சேர்த்துக் கொண்டிருந்தோம்.இந்த சூழலில்தான் ஆட்சி பொறுப்பேற்றதும், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தோம். அந்த கமிட்டியின் அறிக்கையை பெற்று சட்டமன்றத்தில் விவாதித்திருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று மசோதாவை நிறைவேற்றினோம். இந்த சட்டமுன்வடிவினை உடனடியாக ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த அரசியல் சட்ட கடமையை செய்யவில்லை. அதனால் நானே 27.11.2021 அன்று நேரில் சென்று ஆளுநரிடத்தில் வலியுறுத்தி இருக்கிறேன். பிறகு எனது அமைச்சரவையிலே இடம்பெற்றிருக்கக்கூடிய மூத்த அமைச்சர் துரைமுருகன் 17.12.2021 அன்று ஆளுநரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார்.அதுமட்டுமல்ல, 28.12.2021 அன்று அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் குடியரசு தலைவர் அலுவலகத்தில் சென்று மனு அளித்து வலியுறுத்தி இருக்கிறோம். ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்திக்க இயலாத சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை அவசரமாக முதலமைச்சர் என்ற முறையில் கூட்டினேன். அதாவது, 8.1.2022 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நீங்கள் எல்லாம் வருகை தந்து ஆலோசனைகளை எல்லாம் வழங்கினீர்கள். ‘நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.ஜனவரி 12ம் தேதி தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார். அப்போதுகூட காணொலி வாயிலாகவே, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். 17.1.2022 அன்று நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்கள் குழு ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தியது.ஆனால், 2007ம் ஆண்டு 87 நாட்களுக்குள் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், 13.9.2021ல் நாம் நீட் தேர்வு தேவையில்லை, மாணவர்களை கொல்லும் இந்த தேர்வில் இருந்து விலக்கு அளியுங்கள் என்று நிறைவேற்றிய சட்டமுன்வடிவை நம்முடைய ஆளுநரே 142 நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து, இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுற்று மாணவர் சேர்க்கை தொடங்கிய பிறகே, சட்டமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 1ம் தேதி அதை திருப்பி அனுப்பியுள்ளார்.அதற்கான செய்திக்குறிப்பில், நீட் தேர்வு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக மேற்கோள் காட்டுகிறார். ஆனால் நீட் விலக்கு சட்டமுன்வடிவு நமது சட்டமன்றத்தினுடைய 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் தொடர்புடையது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை தொடர்பானது. அந்த தீர்ப்பு வேறு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் வேறு. அதனால்தான் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை கோருகிறோம்.குடியரசு தலைவர் முடிவு எடுக்கும் முன்பே, ஆளுநர் சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியிருக்கிறார். அதனால்தான் இந்த அசாதாரண சூழல் குறித்து விவாதித்து, நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த சமூகநீதி போராட்டத்தை நடத்திட வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் உங்களை எல்லாம் அழைத்திருக்கிறோம். அடுத்தகட்டமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை நீங்கள் அனைவரும் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi