தமிழக மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகள் ஏலம்; இலங்கை அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்திடவும், இலங்கையின் பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் பிரதமர் மோடி அவசரமாகத் தலையிட வேண்டுமென்று கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கை அரசு வசம் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் நீரியல் வளத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இலங்கை அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது. கவலைக்குரிய இந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இப்பொருள் குறித்து ஏற்கனவே தாம் கடந்த ஜனவரி 24ம் தேதி அன்று உழுதிய கடிதத்தில், 2018ம் ஆண்டிற்கு முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 125 பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை வெளிப்படையான முறையில் அகற்றுவதற்கான முயற்சிகளை இறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி பிரதமர், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கோரிக்கை வைத்திருந்ததையும், அதில், 2018ம் ஆண்டிற்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் விரைவில் விடுவிக்க உறுதி செய்ய வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் தான் கேட்டுக் கொண்டிருந்திருந்ததையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து, இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28ம் தேதியிட்ட மின்னஞ்சலில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் ஏலத்தை இலங்கைத் தரப்பு தொடராது என்றும் உறுதியளித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக இலங்கை செல்லவிருந்த அதிகாரிகளின் உத்தேசப் பயணத் திட்டத்திற்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் இசைவாணை வழங்கியுள்ளதுடன், அப்பயணத்திற்கான புதிய தேதிகளை இறுதி செய்யுமாறும், இலங்கைத் தரப்பிடமிருந்து அதற்கான ஒப்புதலைப் பெற்று, விரைவில் (குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே) அதைத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு முன்மொழிந்த தேதிகள் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், இந்தப் பயணத்திற்கான திருத்தப்பட்ட தேதி வரும் மார்ச் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை என்று உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசு தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, எந்தவிதமான ஆலோசனையுமின்றி தொடர்ந்துள்ள ஏல நடவடிக்கை,  இதற்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்தியத் தூதரகம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை தடம்புரளச் செய்வதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மீட்க முடியாத நிலையில் உள்ள மீன்பிடிப் படகுகள் உரிய நீதித் துறை நடைமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலே கூறப்பட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையால் முன்மொழியப்பட்ட ஏலத்தைத் தடுத்து நிறுத்திடவும், 2018ம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழகப் படகுகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களின் உத்தேசப் பயணத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறவும் கேட்டுக் கொண்டுள்ளார். 2018க்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் பிரதமர் அவசரமாகத் தலையிட வேண்டும். இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்