வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள வெலதிகாமணி பெண்டா, வீரண மலை உள்ளிட்ட ஆந்திரா மாநிலம் செல்லும் மலை சாலையில் மண் சரிவு ஏற்பட்டு கடந்த 2 தினங்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா, வாணியம்பாடி தாசில்தார் மோகன் ஆகியோர் இரண்டு தினங்களுக்கு முன்பு சாலை பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி செயற் பொறியாளர் புருஷோத்தமன் தலைமையிலான மாநில நெடுஞ்சாலை துறையினர் மலை சலையில் மண் சரிவால் சாலையில் விழுந்து இருந்த கற்களை அகற்றி துண்டிக்கபட்டு இருந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மண் சரிவு காரணமாக சாலை துண்டிப்பு ஏற்பட்டு பாதிப்பு அதிகமாக உள்ளதால் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையில் இரு சகக்ர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகிறது. இந்த சாலை மலையில் சுமார் 50 அடி ஆழத்திற்கு கீழ் இருந்தே தடுப்பு சுவர் அமைத்து மலை சாலை முழுவதுமாக சரி செய்த பின்னரே வழக்கம் போல் வாகனங்கள் இயங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….