Tuesday, October 1, 2024
Home » தமிழக அரசு பேருந்துகளில் விரைவில் ஓட்டுநர், நடத்துநர் நியமிக்க நடவடிக்கை

தமிழக அரசு பேருந்துகளில் விரைவில் ஓட்டுநர், நடத்துநர் நியமிக்க நடவடிக்கை

by Ranjith

 

விழுப்புரம், ஜூன் 19: விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த மே 2020 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர் என மொத்தம் 8,361 பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்களான ரூ.1,582 கோடியை வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.

விழுப்புரம் கோட்டத்தில், 4.11.2022 அன்று முதற்கட்டமாக ஓய்வுபெற்ற 137 பணியாளர்களுக்கு ரூ.18.63 கோடியும், 2வது கட்டமாக 200 பேருக்கு ரூ.30.63 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 278 பணியாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது, என்றார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், முன்னாள் முதல்வர் கலைஞர் தான், போக்குவரத்துத்துறையை ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே 21,000க்கும் அதிகமான பேருந்துகள் இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துத்துறையை சீரமைத்து, அனைத்து பணியாளர்களும் மாதம் முதல் தேதியன்றே ஊதியம் பெறுகின்ற நிலையை உருவாக்கி கொடுத்தார். மேலும், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளார். மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டொன்றுக்கு ரூ.2,500 கோடி நிதியுதவியை முதல்வர் வழங்கி வருகிறார். புதியதாக பேருந்துகள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும் புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கவும் அரசாணை வழங்கப்பட்டுள்ளது, என்றார். ரவிகுமார் எம்.பி., எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

1 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi