Saturday, July 6, 2024
Home » தமிழக அரசு இலவசம் என்று அறிவித்த பிறகு 78 லட்சம் பெண்கள் பஸ்சில் பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

தமிழக அரசு இலவசம் என்று அறிவித்த பிறகு 78 லட்சம் பெண்கள் பஸ்சில் பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

by kannappan

சென்னை: தமிழகம்  முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 12ம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதில் 5,741 திருநங்கைகள், 51,615 மாற்றுத்திறனாளிகள்,  அவர்களின் உதவியாளர்கள் 8,396 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், 12ம் தேதி முதல் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச பயண சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பேருந்து இயக்கப்படாமல் இருந்த  செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி பகுதியில் முதலமைச்சர் உத்தரவின் படி நேற்று முதல் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துத்துறை  மக்களுக்காக மட்டுமே, லாபத்திற்காக அல்ல. டீசல் விலை தினசரி அதிகரித்து வருகிறது. டீசல் விலை அதிகரிப்பதால் பேருந்து டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. கடந்த 2 தினங்களில் புதுச்சேரிக்கு 364  பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
நிர்பயா திட்டம் மூலம் சென்னையில் 2,500 பேருந்துகளில் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, ₹70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ₹41 கோடி பெறப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி வாகனங்களை FC (தரச்சான்றிதழ்) செய்து பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன வரிக்கட்டுவதில் கால நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பஸ்சில் செல்வதில் நெல்லை பெண்கள் ‘டாப்’
அமைச்சர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் மொத்த பயணம் செய்பவர்களில் 56% பெண்கள் எனவும், நாள் ஒன்றிற்கு 28 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். பேருந்துகளில் அதிகளவில் பெண்களே பயணம் செய்கிறார்கள். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 68% பெண்கள் தினசரி பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்ற திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் நாட்களில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.

You may also like

Leave a Comment

nine − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi