சென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஒன்றிய அரசு சரியான நேரத்தில் மருந்து வழங்காததால் கடந்த 6 வாரத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு கோவாக்சின் 2ம் தவணை கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.தமிழ்நாடு முழுவதுமாக கடந்த ஜூலை 4ம் தேதி 17,72,296 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 15 முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.ஆனால் ஒன்றிய அரசு போதிய அளவில் தடுப்பூசி வழங்காததால், சுமார் 4 லட்சம் பேருக்கு 2ம் தவணை தடுப்பு மருந்து கிடைக்கவில்லை. அதாவது தமிழ்நாட்டில் கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 5ல் ஒருவருக்கு 2ம் தவணை மருந்து போடப்படவில்லை. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 42% பேருக்கு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. சென்னையில் 12% பேருக்கு மட்டும் கோவாக்சின் 2ம் தவணை போட வேண்டி உள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசி பொறுத்தவரை முதல் தவணைக்கு 2ம் தவணைக்குமான இடைவெளி அதிகரிக்கும் என்பதால் சுமார் ஒரு கோடி பேருக்கு இன்னும் 2ம் தவணை செலுத்தப்படவில்லை.ஒருபுறம் தடுப்பூசி வீணாவதை தமிழக அரசு முற்றிலுமாக கட்டுப்படுத்தி இருக்கிறது. மறுபுறம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், ஒன்றிய அரசு போதுமான அளவு மருந்து வழங்காததால் சரியான நேரத்தில் பலருக்கு மருந்து கிடைக்கவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கை ஆகும். …