சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் 20ம் தேதிக்கு பிறகு திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பருக்கு பிறகு பள்ளிகள் திறக்க முடிவு எடுக்கப்பட்டு 2021 ஜனவரி மாதம் முதல் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா 2ம் கட்ட அலை தொடங்கியது. இதையடுத்தும் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால், பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் தற்போது கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. அதேபோல பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக அண்டை மாநிலமான புதுச்சேரியில் 16ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என்று அந்த அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்திலும் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து தொடங்கியுள்ளது. மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரின் கருத்து கேட்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது 20ம் தேதி அல்லது அதற்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அதன் மீது முதல்வர் பின்னர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது….