Monday, July 1, 2024
Home » தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சபரி மலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்: இலவச ஆம்புலன்ஸ் வசதியை துவக்கி வைத்து அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சபரி மலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்: இலவச ஆம்புலன்ஸ் வசதியை துவக்கி வைத்து அமைச்சர் சேகர்பாபு தகவல்

by kannappan

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் வசதிக்காக, அதற்கான கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் சபரிமலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. சபரி மலை அடிவாரத்துக்கு செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம், இரண்டு மாத காலத்துக்கு சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், அவசர உதவிக்கும் பயன்படும். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அறநிலையத் துறையின் சார்பில் சபரி மலையில் உதவி மையம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் கிடைக்கும். அறநிலையத்துறை கல்லூரி தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக பின்பற்றுவோம். சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சி தமிழகத்தின் முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகிறது. சபரிமலை செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சபரிமலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் அந்த முகாம்களை பயன்படுத்தி சான்றிதழ்களை வாங்கி கொள்ளலாம்.சென்னையை சிங்கப்பூர் ஆக்கினோம் என தேர்தல் சமயத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கூறினார். ஆனால் பருவமழைக்கு சென்னை நகரம் தத்தளித்தது. கடந்த காலங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு ஒதுக்கிய நிதி எங்கே. இதற்கு பதில் இல்லை. வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பேன் என முதல்வர் கூறியது சரிதான். உப்பை திண்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.* கோயில் சொத்துகளுக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்கப்படும் சென்னை சவுகார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜபெருமாள் கோயில்களில் இணையதளம் மூலம் வாடகை செலுத்தும் முறையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக்தில் உள்ள 5,720 கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு, 1492 கோயில்கள் மூலமாக இதுவரைரூ.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயில்களின் அசையா சொத்துகளை வருமானம் ஈட்டும் சொத்துகளாக 3 மாதங்களில் மாற்றப்படும். வாடகைதாரர்கள் வழக்கம் போல கோயில் அலுவலகத்திலும் பணத்தை செலுத்தி கணினி மூலம் ரசீது பெறலாம் அல்லது பெரிய கோயில்களில் உள்ள பொது வசூல் மையத்தில் கேட்பு தொகையை செலுத்தலாம்.2012ம் ஆண்டு அமைக்கப்பட்ட நியாய வாடகை நிர்ணய குழு ஆய்வு மேற்கொண்டு அளித்த ஒப்புதல்படி வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் 15% வாடகை உயர்த்திடவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தமிழகம் முழுவதும் இருந்து வாடகை அதிகமாக இருப்பதாக தொடர்ந்து வரும் புகார்களின் அடிப்படையில், முதல்வரின் அனுமதி பெற்று வாடகை நிர்ணய குழுவை மாற்றியமைத்து அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படாத வகையில் நியாயமான வாடகை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே துவக்கப்பட்ட, மற்றும் துவக்கப்பட உள்ள கல்லூரிகளில் ஆன்மிக வகுப்புகள் தொடங்க உயர் கல்வித் துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். நிச்சயம் அனுமதி பெற்றவுடன் வகுப்புகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

You may also like

Leave a Comment

three × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi