சென்னை: தமிழக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 26.8 சதவீதம் வாக்காளர்கள் இணைத்துள்ளனர். ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு வேறு தொகுதிகளில் இருப்பது, ஒரே தொகுதியில் இரு இடங்களில் இடம் பெறுதல் உள்ளிட்டவைகளை தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை தேர்தல் ஆணையம், கடந்த, ஆகஸ்ட் 1 முதல் துவங்கியுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை வீடு, வீடாக சென்று மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர், எளிய முறையில் ஆதார் இணைக்க, nvsp என்ற இணையவசதியும், voter helpline ‘மொபைல் ஆப்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது. ‘படிவம் – 6 பி’யை பூர்த்தி செய்தால், எளிதாக ஆதார் இணைத்து கொள்ளலாம். இந்நிலையில், இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், தமிழக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 26.8 சதவீதம் வாக்காளர்கள் இணைத்துள்ளனர் என்று கூறினார். தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1 முதல் இணைக்கும் பணி தொடங்கிய நிலையில், ஒரு மாதத்தில் அதாவது (ஆகஸ்ட் 31)ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைத்தவர்கள் 26.78 சதவீதம் பேர் ஆகும். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 பேர் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 1 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது….