தஞ்சை: தமிழகத்தில் இந்தாண்டு விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு கடன் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பின்னர் அளித்த பேட்டி: தமிழகத்தில் இந்தாண்டு விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் சேர்த்து, புதிய கடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீடு இழப்பீடு தொகை, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 2015-2016ல் வாங்கப்பட்ட கடனை மூன்று தவணைகளில் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தள்ளுபடியில் இந்த கடன் தொகை விடுபட்டுள்ளதாக விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் கடன் தள்ளுபடி, நகைகடன், சொத்துக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அதற்கு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருந்தவர்கள் மீது அதிக புகார்கள் வந்துள்ளது. அதை முறையாக ஆய்வு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை பாக்கி குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கலைஞர் முதலமைச்சராக இருந்த போது வழங்கியது போல, மு.க.ஸ்டாலினும் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்….