தமிழகத்திலேயே செங்கல்பட்டு மாவட்டத்தில் ₹218.08 கோடியில் மருத்துவ கட்டிட பணிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

செங்கல்பட்டு, ஜூலை 18: தமிழகத்திலேயே செங்கல்பட்டு மாவட்டத்தில் ₹218.08 கோடி செலவில் மருத்துவ துறை சார்ந்த 31 கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ₹1.75 கோடி செலவில் அவசர சிகிச்சை மைய கட்டிடம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட கடுகப்பட்டு கிராமத்திற்க்கு ₹20லட்சம் செலவில் துணை சுகாதார நிலையம், அதே தொகுதிக்கு உட்பட்ட இரும்புலிசேரி கிராமத்தில் ₹25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் என மூன்று இடங்களில் மொத்தம் ₹2.20 கோடி செலவில் 3 மருத்துவ கட்டிடங்களை மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் நேற்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, கொலப்பாக்கம், படப்பை போன்ற பகுதிகளில் ஆண்டுக்கு 6,700 விபத்துகள் நடக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பெருமாள் கோவிலில், ₹1.75 கோடி செலவில், அவசர சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது. இதில் 4 மருத்துவர்கள், 12 செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். வெண்டிலேட்டர், இசிஜி மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உடனுக்குடன் சிகிச்சைக்கு அளிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்.

அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறிந்து செயல்படுவதன் மூலம், அவசர கால ஊர்திகள் விபத்து நடைபெறும் இடங்களுக்கு சென்றடையும் காலம் 16.49 நிமிடங்களில் இருந்து 11.21 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலேயே சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் என 218.08 கோடி செலவில் அதிகபடியான மருத்துவ துறை சார்ந்த 31 மருத்துவ கட்டிட பணிகள் நடைபெறும் மாவட்டமாக செங்கல்பட்டு உள்ளதாக மா. சுப்பிரமணியன் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட குழு தலைவர் செம்பருத்தி, ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, திமுக ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், கே.பி.ராஜன் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் பரணிதரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி