சென்னை: தமிழகத்துக்கு மேலும் ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் நேற்று சென்னை வந்தது. தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதை தமிழக முதலமைச்சர் நேற்று முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். ஆனால் மத்திய அரசிடமிருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை. இதையடுத்து தமிழக அரசு தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதோடு தமிழக அரசே நேரடியாக தடுப்பூசிகளை வாங்கவும் முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மும்பையிலிருந்து ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஏர்இந்தியா விமானத்தில் சென்னை வந்துள்ளது. 9 பார்சல்களில் வந்த அந்த தடுப்பூசி மருந்துகளை சென்னை விமானநிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையினர் பெற்றுக்கொண்டு, சென்னை டிஎம்எஸ்சில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து சென்றனர். …