டெல்லி: ஜூன், ஜூலை மாதத்துக்கான 33.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கான 9.19 டி.எம்.சி. மற்றும் ஜூலைக்கான 24 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் மத்திய நீர்வள ஆணையர் ஹல்தார் தலைமையில் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்த பிரச்னையை எழுப்பியது. மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதி பெறப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு அதிகாரிகள், மேகதாது மட்டுமல்லாது எங்கு அணை கட்டினாலும் தமிழக அரசின் அனுமதி தேவை என்றும் அவசர தேவைக்காக திறந்துவிடும் தண்ணீரை தமிழகத்திற்கான நீராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டு நிலையில் கர்நாடக அரசு மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை தர வேண்டும் என்றும் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். அதுமட்டுமில்லாமல், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பகட்ட பணியையும் மேற்கொள்ள கூடாது என்று தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழகத்திற்கு 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு ஆணையிட்டுள்ளது….