Friday, July 5, 2024
Home » தமிழகத்தின் 28 மாவட்டங்களில் இன்று கிராமசபை கூட்டம்: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தமிழகத்தின் 28 மாவட்டங்களில் இன்று கிராமசபை கூட்டம்: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

by kannappan

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற 28 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம மக்களிடையே உரையாட இருக்கிறார்.  குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சி திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்துதல், ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் உள்ளிட்டவை கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கிராம மக்களின் கையில் இருக்கும் அதிகாரமாக, கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் இருக்கிறது.  கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் மேலாக, தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்தநிலையில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய 28 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் இன்று காலை 10 மணி முதல் நடைபெறும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதியை வழங்கியுள்ளனர். மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். திறந்தவெளியில் பந்தல்களை அமைத்து கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. குறிப்பிட்ட அளவை விட வெப்பநிலை அதிகம் இருந்தால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதேபோல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறி தென்படும் நபர்களை கூட்டத்திற்கு அனுமதிக்கக்கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களையும் கூட்டத்தில் அனுமதிக்கக்கூடாது. அதன்படி, கிராமசபை கூட்டம் நடைபெறும் இடத்தில் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி  கிராமத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம மக்களிடையே  உரையாட இருக்கிறார்….

You may also like

Leave a Comment

13 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi