சேலம், செப்.6: சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் வரும் 26ம் தேதி வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தபால் கோட்டத்தில் கோட்ட அளவிலான தபால் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. அதனால், தபால் வாடிக்கையாளர்கள், தங்களது புகார்களை சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பலாம். இப்புகார் கடிதங்களை வரும் 12ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தபால்துறையின் மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின், அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விவரங்கள் இருக்க வேண்டும். முழு விவரங்கள் அடங்கிய புகாரை அனுப்பும் அஞ்சல் உறையின் மீது ‘தக் அதாலத்’ என்று குறிப்பிட வேண்டும். இத்தகவலை கோட்ட கண்காணிப்பாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.