சேந்தமங்கலம், மே 4: புதுச்சத்திரம் வட்டாரத்தில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு அறிவியல் பயிற்சி திருவிழா நடந்தது. புதுச்சத்திரம் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அறிவியல் திருவிழா பயிற்சி நடந்தது. வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சந்திரசேகரன் அறிவியல் பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியில் ஒன்றியத்தில் உயர் தொடக்க நிலை கையாளும் 30 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையும் கோடை விடுமுறையை சில அறிவியல் செயல்பாடுகளுடன் கழிக்கும் வாய்ப்பை பெறும் வகையில், அன்றாட வாழ்வில் அறிவியல் பரிசோதனைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வானவில் மன்ற ஒன்றிய (பொ) ஆசிரியை கனகவல்லி, கருத்தாளராக செயல்பட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.