சென்னை: தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் தனி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களின் பதவி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த டிசம்பர் 31ம் தேதிவரை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், 17 மாநகராட்சிகள், 110 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல், வாக்குச்சாவடிகளை அடையாளம் காணுதல், மின்னணு வாக்கு இயந்திரங்களின் முதல் நிலை பரிசோதனை செய்தல் போன்ற தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கைகள் கூறப்பட்ட ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலைகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று முடிவடைவதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரையிலான மேலும் 6 மாத காலத்திற்கு அல்லது பேரூராட்சிகள், நகராட்சிகள், மற்றும் மாநகராட்சிக்களுக்கான சாதாரண தேர்தல்களுக்கு பின்பு நடத்தப்படும் மன்றத்தின் முதல் கூட்டம் வரை இதில் எது முந்தையதோ அது வரையில் நீட்டிப்பதற்காக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்கள் திருத்தம் செய்ய அரசானது முடிவு செய்துள்ளது. மாநில சட்டமன்றப் பேரவையானது, அந்த நேரத்தில் அமர்வில் இல்லாமல் இருந்தால் மேற்கண்ட முடிவிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது தேவையானதாக இருந்தது. அதற்கிணங்கிய வகையில் 2021ம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிகள் சட்டங்கள் அவசரச் சட்டமானது 2021ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதியன்று ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு அதே தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது….