திண்டுக்கல், பிப். 19: திண்டுக்கல்லில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 250 பேருக்கு பணி நியமன அணைகளை திண்டுக்கல் மேயர் இளமதி வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் கல்லூரியில் சிறப்புத் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பிரபாவதி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் காமேஸ்வரி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இளமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 90 நிறுவனங்கள், 15 திறன் பயிற்சி நிறுவனங்கள், 1170 வேலை நாடுநர்களும் கலந்து கொண்டனர். இம் முகாம் மூலமாக 250 பேர் பணி நியமனம் பெற்றனர். வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற அனைத்து வேலை நாடுநர்களுக்கும், அரசின் நலத்திட்ட உதவிகள், சுய வேலை வாய்ப்புக்கான கடனுதவி, திறன் பயிற்சி விவரங்கள் மற்றும் அயல் நாட்டில் பணி வாய்ப்புக்கான ஆலோசனைகள் குறித்து அந்தந்த துறையினரால் எடுத்துரைக்கப்பட்டு அவற்றிற்கான கையேடுகளும் வழங்கப்பட்டன.