வேலூர், செப்.28: வேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் கண்ணன் நகரை சேர்ந்தவர் நவீன்குமார்(35). இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது அண்ணன் ராஜ்குமார், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் அண்ணன் குடும்பத்துடன் நவீன்குமார் மனைவி குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமார் தனது குடும்பம் மற்றும் தனது அண்ணன் குடும்பத்துடன் கடந்த 20ம் தேதி காலை வீட்டை பூட்டிக் கொண்டு வேலூர் கஸ்பாவில் உள்ள தனது தந்தையின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மொபைலில் கடந்த 25ம் தேதி இரவு தொடர்பு கொண்ட வீட்டின் அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்து விரைந்து வந்த நவீன்குமார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அலமாரி கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் ₹3.60 லட்சம் மதிப்புள்ள 12 சவரன் தங்க நகைகளும், ₹30 ஆயிரம் மதிப்புள்ள வைர நெக்லசும் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.