தனியார் மதுபாரில் விபரீதம் மது கேட்ட வாலிபர் அடித்து கொலை: பார் ஊழியர்கள் வெறிச்செயல் 2 பணியாளர்கள் சிறையில் அடைப்பு

சென்னை: சென்னை, மேற்கு மாம்பலம், பன்னீர்செல்வம் நகர், திருவீதியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் பெயின்டர் கோகுல் (24). இவர், நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், கோவிந்தன் ரோடு, ஸ்ரீநிவாசா தியேட்டர் பின்புறமுள்ள மதுபான கடை பாருக்கு சென்று மதுபானம் கேட்டுள்ளார். அப்போது, பார் ஊழியர்கள் 12 மணிக்கு மேல் கடையில் வாங்கிக் கொள் என கூறியபோது, கோகுல் ரகளை செய்து கீழே இருந்த கல்லை எடுத்து இருவரையும் தாக்கியுள்ளார். அப்போது, பார் ஊழியர்கள் இருவரும் அருகிலிருந்த கட்டையால் கோகுலின் தலையில் அடித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோகுலின் தந்தை, கோகுலை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து கோகுல் அசைவின்றி கிடந்ததால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து கோகுலை பரிசோதித்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோகுலின் தந்தை கண்ணன் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கோகுல் மதுபான பாருக்கு சென்று மதுபானம் கேட்டு ரகளை செய்தபோது, பார் ஊழியர்கள் சகாய ஜெபஸ்டீராஜ் மற்றும் கோபி ஆகியோர் அவரின் தலையில் கட்டையால் தாக்கியதில் வீட்டிற்கு சென்ற கோகுல் சிறிது நேரத்தில் இறந்துபோனது தெரியவந்தது. அதன்படி கொலை பிரிவில் வழக்குப் பதிவு செய்து மதுபான பார் ஊழியர்கள் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, உதயனூர் பகுதியை சேர்ந்த சகாய ஜெபஸ்டீராஜ் (எ) சஞ்சய் (24), ராமநாதபுரம் மாவட்டம், சர்குனிவழி, அனத்தூரை சேர்ந்த கோபி (37) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்….

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்