சங்ககிரி, ஜூன் 19: இடைப்பாடி அருகே கவுண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (25), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இடைப்பாடியில் இருந்து திருச்செங்கோடு செல்ல தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது காலை 9:25 மணிக்கு கொங்கணாபுரத்தில் இருந்து சங்ககிரி சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது ராஜாமணி தோட்டம் என்ற இடத்தில் பஸ்சின் பின்பக்க டயர் வெடித்ததில் வைத்தீஸ்வரன் அமர்ந்திருந்த இடத்தை கிழித்துக்கொண்டு டயர் அடித்ததில் வைத்தீஸ்வரனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சகப்பயணிகள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இடைப்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.