திருவொற்றியூர்: திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. நேற்று விடியற்காலை இந்த நிறுவனத்தின் பின்புறம் எண்ணெய் கேன்கள் மற்றும் அட்டை பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30 தீயணைப்பு ஊழியர்கள் ரசாயன திரவம் மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால் தொழிற்சாலையில் உள்ள விலை உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதம் ஆகவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது….