தந்தை கொரோனாவால் உயிரிழப்பு மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளின் தாய் தவிப்பு: அரசு தலையிட்டு உதவ கோரிக்கை

காஞ்சிபுரம்: கொரோனா தொற்று காரணமாக தந்தை இறந்துவிட்டதால், மாற்றுத் திறனாளி பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் தாய் தவித்து வருகிறார். அரசின் நிபந்தனை காரணமாக அக்குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியைச் சார்ந்த சுந்தர்ராஜன் மற்றும் தனம் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். அதில்  இரண்டு பெண் பிள்ளைகளுக்கு வாய் பேச இயலாது. சுந்தரராஜன் கைவினை பொம்மை செய்து விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொது முடக்கம் காரணமாக இவர்களின் தொழில் முடங்கிப் போனதோடு வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்த சுந்தரராஜன் குடும்பம் அதிலிருந்து மீள்வதற்காக வங்கியில் கடன் பெற்று இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக சுந்தரராஜன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல்  உயிரிழந்தார்.  ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டு காலமாக செய்த பொம்மைகள் அனைத்தும் வீட்டினுள் விற்பனையாகாமல்  உள்ளது.  உற்றார் உறவினர்களிடம் மேலும் கடன் வாங்கி குடும்ப பொருளாதார நிலையை தற்காலிகமாக சீர் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை மற்றும் பிள்ளைகளுக்கு உண்டான கல்வி எதிர்காலம் அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது,  சுந்தர்ராஜன் குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் ஒரு பட்டியலில் இல்லை எனக் கூறி இவர்களுக்கு அரசு நிவாரணம் எதுவும் வழங்க வாய்ப்பில்லை என கூறியிருக்கின்றனர். சுந்தர்ராஜன் வங்கியில் கடன் பெற்று இருக்கும் காரணத்தினால் அவர் வறுமைக்கோட்டின் கீழ் வர மாட்டார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இரண்டு மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு சுந்தரராஜன் மனைவி தவிக்கிறார்.   பொருளாதார ரீதியில் தற்போது நலிவடைந்து குடும்ப பாரம் அனைத்தையும் 12ம் வகுப்பு படித்த தனது இரண்டாம் மகனிடம் ஒப்படைத்து விட்டார். கல்லூரி செல்லும் வயதில் அச்சிறுவன் குடும்ப பாரத்தைச் சுமந்து கிடைக்கும் சிறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலையில் தற்போது இருக்கிறார். எனவே தமிழகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இந்த விதிமுறைகள் காரணமாக, பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளால் பயன் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் உதவ, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, கொரோனாவால் குடும்பத்தினரை இழந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.வறுமைக்கோட்டு அறிவிப்பால் குழப்பம்!கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின்  பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும்,  அக்குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு  வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கு உதவித்தொகையாக உடனடியாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.  அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசு ஏற்கும். பட்டப்படிப்பு  வரையிலான செலவை அரசு ஏற்கும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா  நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை அறிவிப்பில் சற்றே குழப்பம் நிலவுகிறது.அரசு விதித்துள்ள நிபந்தனைகள் காரணமாக, பெரும்பாலான குழந்தைகள்  நிவாரணம் பெற முடியாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்  இருவரை இழந்த குழந்தைகளுக்கு, வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. ஆனால்,  தந்தை அல்லது தாய் இருவரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், முதல்வர் அறிவித்த நிவாரண உதவியை பெற  வேண்டும் என்றால், அந்த குழந்தைகளின் குடும்பம், வறுமை கோட்டிற்கு கீழ்  உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். பட்டியலில் இல்லை  என்றால் அவர்கள் பட்டியலில் இடம் பெற தகுதியானவர்களா என ஆய்வு செய்து,  அவர்களை பட்டியலில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே யார் நிவாரணம் பெறத் தகுதியானவர் என்கிற குழப்பம் ஏற்படுகிறது….

Related posts

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்