குடியாத்தம், அக்.7: குடியாத்தம் அருகே நிலத்தை உழுது கொண்டிருந்தபோது, தந்தை ஓட்டிய டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கார்த்திகேயன். இவரது மகள் ஜெனிகா(12). தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று கார்த்திகேயன் தனது நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது, ஜெனிகா டிராக்டர் மீது அவருடன் அமர்ந்திருந்தார். நிலத்தில் உழுது ெகாண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஜெனிகா டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில், படுகாயம் அடைந்த அவரை கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஜெனிகா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தை உழுதபோது தந்தை ஓட்டிய டிராக்டரில் இருந்து மகள் தவறி கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.