தடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியில் சென்னை மாநகராட்சி மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது என்று  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறினார். சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில்  வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு  கோவிட் தடுப்பூசி முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, விருகம்பாக்கம் எம்எல்ஏ., ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும்  அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்திற்கு இதுவரை கோவாக்சின், கோவிஷீல்டு என ஒரு கோடியே 10 லட்சம் அளவில் தடுப்பூசிகள் வந்துள்ளது. இன்று (நேற்று) மாலைக்குள் 1 கோடி தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்படும். சென்னையில் 21 லட்சத்து 63 ஆயிரத்து 260 பேர் வேக்சின் போட்டுள்ளனர். கொரோனாவின் ‘ஹாட் ஸ்பாட்டாக’ பகுதியான கோயம்பேடு மார்க்கெட்டில் 9,655 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் 5 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.கோயம்பேட்டில் மே மாதம் 16 பேருக்கும்,  ஜூன் மாதத்தில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  முதல்வர் டெல்லி பயணத்தின் போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைப்பார். கொரோனா குறைந்துள்ளதால், மதுபான கடைகள் திறக்க முடிவெடுத்துள்ளது. தற்போது டீ கடைகள் திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும். சென்னையில் 10-25 பேர் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 21 ஆக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 33,618 தெருக்களில் தொற்று  இல்லை. மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை காட்டிலும் சென்னை மாநகராட்சியில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே தொற்று உள்ளதுஇவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.இதை தொடர்ந்து,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் 141 கோடி செலவில் கட்டப்பட்டு வரும், பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அண்ணாநகர் எம்எல்ஏ உறுப்பினர் மோகன், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணன  பாபு, தலைமை பொறியாளர் விஸ்வநாதன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை  டீன் சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் தமிழகத்தில் 3 பெரிய மருத்துவமனைகளில் பெரிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்தவும், 11 மாவட்ட அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும் பணிகள் நடக்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 1,634 கோடியாகும்.இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை