சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்ய தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் ஷங்சோங்கம் ஜடக் சிரு நேற்று கோயம்பேடு வணிக வளாகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார இணை ஆணையர் ஸ்ரீதர், அண்ணாநகர் காவல் துணை ஆணையர் ஜவஹர்,கோயம்பேடு வணிக வளாக முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: வியாபாரம் மேற்கொள்ளும் அனைத்து வணிகர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் இவளாகத்தில் அமைந்துள்ள மாநகராட்சியின் மினி கிளினிக்கில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் வணிகர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றவேண்டும். தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் அங்காடிகளுக்கு கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும். 20 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கும் இவ்வளாகத்தில் விற்பனை மேற்கொள்ள தடை விதிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். …