கரூர், ஜூன் 15: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் முதல் சுக்காலியூர் வரையுள்ள சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச் சுவரோரம் படிந்துள்ள மணற்பரப்புகளை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகருக்குள் செல்லாமல் கோவை, மதுரை, ஈரோடு, சேலம், திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலையை அடையும் வகையில் கரூர் திருமாநிலையூர் பகுதியில் இருந்து செல்லாண்டிபாளையம் வழியாக சுக்காலியூர் பைபாஸ் சாலைகள் சந்திக்கும் பகுதிக்கு செல்லும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக தடுப்புச் சுவரோரம் அதிகளவு மணற்பரப்புகள் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதோடு, அவ்வப்போது விபத்திலும் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, தடுப்புச் சுவரை ஒட்டி படர்ந்துள்ள மணற்பரப்புகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.