சென்னை: சென்னை நந்தனத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர், ஜி.எஸ்.டி. அலுவலக அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்று ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ என்ற, தடகள பயிற்சி அகாடமியை பிராட்வே பகுதியில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பயிற்சிக்கு சென்ற தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சி வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மே 28ம் தேதி நாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், ஜாமீன் வழங்க கோரி நாகராஜன் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.எச்.முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், முழுமையாக முடிவடையாததாலும் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்….