தஞ்சை மாநகராட்சியில் 28 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-கலெக்டர் தகவல்

தஞ்சை : தஞ்சை மாநகராட்சியில் 196 வாக்குச்சாவடிகளில் 28 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது,தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மனுத் தாக்கல் செய்ய பிப்.4ம் தேதி கடைசி நாளாகும். தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது.தஞ்சை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இதில் 1,98,597 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.தஞ்சை மாநகராட்சியில் வடக்குவாசல், மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் 2 வாக்குச்சாவடிகளும், வடக்குவாசல் ஜான் டி பிரிட்டோ நடுநிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியும், வடக்குவீதி, செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியும், கரந்தை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகளும், தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஒரு வாக்குசாவடியும், மிஷன் ஆலமரத்தெரு டிஇஎல்சி நடுநிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகளும்,பூக்காரகோயில் தெரு செயிண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகளும், கணபதி நகர் செல்வராஜ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 5 வாக்குச்சாவடிகளும், கண்ணன் நகர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 4 வாக்குச்சாவடிகளும், வல்லம் ரோடு மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் 5 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 28 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் ஆகும். இதில் வண்டிக்காரத் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள 2 பதட்டமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த வாக்குச்சாவடிகளில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படடது. மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்தளம் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.இதை தொடர்ந்து ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு 1,2,3 நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றார்.ஆய்வின்போது தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், தாசில்தார் சீமான் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்….

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!