Monday, July 1, 2024
Home » தஞ்சை அருகே இயங்கிவந்த போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 6 பேர் கைது, 700 மதுபாட்டில்கள் பறிமுதல்

தஞ்சை அருகே இயங்கிவந்த போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 6 பேர் கைது, 700 மதுபாட்டில்கள் பறிமுதல்

by kannappan

தஞ்சை: தஞ்சை அருகே இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்து  போலீசார் சீல் வைத்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர். மேலும் 700  மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் அருகே  துலுக்கம்பட்டி பகுதியில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா உத்தரவின்பேரில், தனிப்பிரிவு போலீசார், நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் போலி மதுபான ஆலை இயங்கி வருவது  கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, தனிப்படை போலீசார் அங்கு அதிரடியாக நுழைந்து தப்ப முயன்ற 6 பேரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் தஞ்சாவூர்  பொட்டுவாச்சாடி வடக்கு தெருவைச் சேர்ந்த மெல்வின் சகாயராஜ் (41),  துலுக்கம்பட்டியில் குமரேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தை, மாதம் ரூ.5 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து கடந்த 4 மாதங்களாக போலி மதுபான ஆலை நடத்தி வந்தது  தெரியவந்தது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களை வாங்கி வந்து தயாரித்து, போலியாக  மதுபான நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றுள்ளது தெரியவந்தது. அங்கு தஞ்சாவூர் அறிவழகன் (30), அருண்பாண்டியன் (33), திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையைச் சேர்ந்த முத்துக்குமார் (29), காரைக்கால் நேரு நகரைச் சேர்ந்த பாபு (எ) விஜயகுமார் (42), காரைக்கால் அருகே கோவில்பத்தை சேர்ந்த  பழனியப்பன் (38) ஆகியோர் வேலைபார்த்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அங்கிருந்த 700 மதுபாட்டில்கள், 2,000 காலி மதுபாட்டில்கள், 2 மூட்டைகளில் பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் கேன்கள், மதுபான மூலப்பொருட்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, போலி மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர்.கைது செய்யப்பட்ட காரைக்கால் பாபு, காரைக்காலில் சில ஆண்டுகளுக்கு முன்பு  படுகொலை செய்யப்பட்ட ராமுவின் அக்கா மகன் ஆவார். பாபு மீது ஒரு கொலை வழக்கும், பல்வேறு மது கடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மேலும் திருக்கண்ணமங்கை முத்துக்குமார் மீது  3 கொலை வழக்குகளும், பெல்வின் சகாயராஜ் மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள், மூன்று சிலை திருட்டு வழக்குகள், அறிவழகன் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. …

You may also like

Leave a Comment

9 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi