தஞ்சாவூர், செப்.29: உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய விலங்கை உடைத்து நூல் அறிமுக விழா தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இலங்கையில் தமிழ் ஈழத்தில் சிங்கள இனவெறியர்களின் தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையை, இனப்படுகொலையை எதிர்த்து, ஈழத் தமிழர்களுக்கு ஈழவிடுதலை உணர்வை ஏற்படுத்திய உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் சுயசரிதை நூலான விலங்கை உடைத்து நூல் அறிமுக விழா தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பேராசிரியர் பாரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
முள்ளிவாய்கால் நிர்வாகி துரை.குபேந்திரன் முன்னிலை வகித்தார். முள்ளிவாய்க்கால் இலக்கியமுற்ற நிர்வாகி பொறியாளர் பழனிராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். உலகத் தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகள் ராமன், தெட்சிணாமூர்த்தி, மனோகரன் ஆகியோர் நூலினை பெற்றுக் கொண்டனர். விலங்கை உடைத்து நூலினை திறனாய்வு செய்து பேராசிரியர் ராமலிங்கம், வழக்கறிஞர்கள் பானுமதி, நல்லதுரை, பொறியாளர் கென்னடி ஆகியோர் திறனாய்வு செய்து உரையாற்றினார்கள்.
நூலின் ஆசிரியர் காசி ஆனந்தன் ஏற்புரை நிகழ்த்தினார். நிறைவாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சிறப்புரையாற்றினார். செல்வபாண்டியன் நன்றி கூறினார்.