தஞ்சாவூர், அக். 2: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியில் பயிர்க் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை ரூ.43.13 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டு (ராபி) சம்பா பருவத்தில், இப்கோ டோக்கியோ, ப்யூச்சர் ஜெனரலி ஆகிய காப்பீடு நிறுவனங்களில், விவசாயிகள் பயிர்க் காப்பீடு பரீமியம் செலுத்தியிருந்தனர்.
இதனிடையே, கடந்தாண்டு சம்பா பருவத்தின்போது ஒரு கிராமத்தில் மொத்தமுள்ள விளை நிலங்களில் 75 சதவீத பரப்பளவுக்கு சாகுபடி செய்யாமல் இருந்தால், கிராம நிர்வாக அலுவலரிடம் அதற்கான சான்றை பெற்று பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தலாம் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யப்பட்டு பயிர்க் காப்பீடு செய்த தஞ்சாவூர், பூதலூர் மற்றும் திருவையாறு உள்ளிட்ட 45 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, முதற்கட்டமாக ரூ.22.44 கோடி பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து, சம்பா சாகுபடியின்போது காப்பீடு நிறுவன பிரதிநிதிகள், வேளாண்மை துறை, வருவாய் துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள், வருவாய் கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை செய்து மகசூலை கணக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி, சம்பா நெல் மற்றும் இதர பயிர்களுக்கு ப்யூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனம் சார்பில் 115 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.11.51 கோடி இழப்பீடு தொகையும் இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனம், இதன்படி 60 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.9.18 கோடி பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.43.13 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 2024-25-ல் குறுவை பருவத்திற்கு தஞ்சாவூர், பூதலூர் உள்ளிட்ட 44 கிராமங்களுக்கு விதைக்க இயலாத நிலையின் கீழ் பயன்பெறும் வகையில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2021-2022-ம் ஆண்டில் ரூ.0.35 கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ.1.120 கோடியும் வழங்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 2023-24 சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு பல மடங்கு கூடுதலாக மொத்தம் ரூ.43.13 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.