தஞ்சாவூர், செப். 11: தஞ்சாவூரில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மனநல மருத்துவ துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மனநல மருத்துவ துறை இணை பேராசிரியர் டாக்டர் நீலகண்டன் வரவேற்றார் . மனநலத்துறை தலைவர் டாக்டர் மீனாட்சி கருப்பொருள் வழங்கினார்.
பேரணியில் டாக்டர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தற்கொலை தடுப்பு சம்பந்தமான பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம், நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார். தொடர்ந்து தற்கொலை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.