சென்னை: கொளத்தூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ், பாரதி. இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களது மகன் தினேஷ் மற்றும் மகள் பாக்கியலட்சுமி சம்பவ இடத்தில் இருந்து மாயமாகி இருந்தனர். இந்நிலையில், நேற்று இசிஆர் பகுதியில் தினேஷ் மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டதன் காரணமாக, மயக்க நிலையில் கிடப்பதாக தினேஷ் அவரது உறவினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்கள் இருவரையும் மீட்டு கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கொளத்தூர் இன்ஸ்பெக்டர் அஜ்ஜுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தினேஷ் அளித்த வாக்குமூலத்தில், கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சரின் உறவினர் உட்பட பலரிடமும் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக கூறி ஆறரை கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பாலாஜி உட்பட 4 பேரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியமேடு போலீசார் தினேஷை அழைத்து விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோசடி வழக்கில் தன்னை முழுவதுமாக சிக்க வைக்க பல்வேறு சதித்திட்டம் நடைபெறுவதாகவும் தினேஷ் கூறியதாக தெரிகிறது. தங்க மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜியுடன் தினேஷுக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. தினேஷ் தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களிடம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி பாலாஜியிடம் கொடுத்ததாகவும், அதை பாலாஜி ஏமாற்றியதால் பணம் கொடுத்தவர்கள் தினேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் பெரியமேடு போலீசார் தினேஷை அடிக்கடி விசாரணைக்கு அழைத்ததால், மனமுடைந்து தினேஷின் தாய், தந்தையர் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தினேஷ் வீட்டில் வந்து பார்க்கும்போது தாய், தந்தையர் இறந்து கிடந்ததாகவும், இதனால் தானும், சகோதரி பாக்கியலட்சுமியும் பூச்சி கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் பயத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றதாகவும் கூறியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வயதான தம்பதியினர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தாய், தந்தையர் பூச்சி கொல்லி மருந்து குடித்து உயிரிழந்ததை பார்த்து விட்டு, தினேஷ் மற்றும் சகோதரி பாக்கியலட்சுமி இருவரும் வீட்டிலேயே தற்கொலை செய்து கொள்ளாமல் பூச்சி மருந்து குடித்துவிட்டு, ஏன் வாந்தி எடுத்துவிட்டு இசிஆர் வரை சென்று அறை எடுத்து தங்கினார்கள், அங்கு தற்கொலை செய்து கொள்ளாமல், ஏன் உறவினருக்கு போன் செய்து தாங்கள் இருக்கும் இருப்பிடத்தை கூறினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்க மோசடி வழக்கில் சிக்கியதால் தப்பிக்கும் நாடகமாக தினேஷ் இதனை அரங்கேற்றியுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்….